உள்ளூர் செய்திகள்

ராஜபாளையம் அருகே கல்குவாரியில் தவறி விழுந்து தொழிலாளி பலி

Published On 2023-02-09 06:40 GMT   |   Update On 2023-02-09 06:40 GMT
  • கல்குவாரியில் தவறி விழுந்து தொழிலாளி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராஜபாளையம்:

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புதூரில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி உள்ளது.

இங்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு வெடி வைத்து கல் உடைக்கப்பட்டது. குவிந்திருந்த கல் குவியலை அகற்றும் பணி இன்று காலை நடந்தது.

இதில் ராஜபாளையம் அருகே உள்ள இளந்திரம்கொண்டான் கிராமத்தை சேர்ந்த மாரிக்கனி(வயது50), தென்காசி மாவட்டம் வலசையை சேர்ந்த முத்துமாணிக்கம்(45), சாமிராஜா(40) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்.

கற்குவியலை அகற்றி கொண்டிருந்தபோது திடீரென கற்கள் சரிந்தது. அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 பேரும் நிலை தடுமாறி தவறி கீழே விழுந்தனர். இதில் 3 பேரும் படுகாயமடைந்தனர். தலையில் பலத்த காயமடைந்த மாரிக்கனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

உயிருக்கு போராடி கொண்டிருந்த முத்து மாணிக்கம், சாமிராஜா ஆகிய 2 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு தென்காசி மாவட்டம் சிவகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் விபத்து குறித்து தகவல் அறிந்த சேத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மாரிக்கனியின் உடலை கைப்பற்றி ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கல்குவாரியில் தவறி விழுந்து தொழிலாளி இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News