உள்ளூர் செய்திகள்

மதுராந்தகம் அருகே கல்குவாரி வெடிமருந்து குடோனை அகற்ற கோரி பெண்கள் போராட்டம்

Published On 2022-07-31 14:57 IST   |   Update On 2022-07-31 14:57:00 IST
  • மதுராந்தகம் அடுத்த அருங்குணம் ஊராட்சிக்குட்பட்ட அகத்திப்பட்டு கிராமம்.
  • விவசாய நிலங்கள் அருகில் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.

மதுராந்தகம்:

மதுராந்தகம் அடுத்த அருங்குணம் ஊராட்சிக்குட்பட்ட அகத்திப்பட்டு கிராமத்தில் கல்குவாரிகளுக்கு பாறைகளை உடைக்க பயன்படுத்தப்படும் வெடி பொருள் சேமிப்பு கிடங்கு உள்ளது.

இந்த குடோனில் 6500 கிலோ வெடி மருந்து சேமித்து சுற்றுவட்டாரத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட கல்குவாரிகளுக்கு வாகனங்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.

வெடி மருந்து சேமிப்பு குடோன் குடியிருப்பு, விவசாய நிலங்கள் அருகில் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.

இந்த வெடிமருந்து குடோனில் அதிக அளவு வெடி பொருட்கள் சேமித்து வைத்துள்ளதால் அசம்பா விதம் ஏற்பட்டால் அருகில் உள்ள கிராமம் முற்றிலும் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.

மேலும் குடோனுக்கு அடிக்கடி வரும் வாகனங்களால் சாலையில் சிறுவர்கள், பொதுமக்கள் சாலையில் நடமாட முடியாமல் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் கல்குவாரி வெடிமருந்து குடோனை அகற்றக்கோரி அப்பகுதி பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் குடோனை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News