உள்ளூர் செய்திகள்

உடுமலையில் மனநிலை பாதித்த பெண் அடித்துக்கொலை- போலீசார் விசாரணை

Published On 2022-12-02 14:29 IST   |   Update On 2022-12-02 14:29:00 IST
  • கடந்த சில நாட்களுக்கு முன்பு உடுமலை அருகே மாடுகளை மேய்க்க சென்ற பெண் கொலை செய்யப்பட்டார்.
  • மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை புக்குளம் சாலை பஸ் நிறுத்தத்தில் இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக உடுமலை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து உடுமலை டி.எஸ்.பி., தேன்மொழி வேல், இன்ஸ்பெக்டர் ராஜ்கண்ணா, மகளிர் இன்ஸ்பெக்டர் கவிதா, கிராம நிர்வாக அதிகாரி அருள்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பெண்ணின் தலை, கழுத்து பகுதியில் காயம் இருந்தது. இதனால் அவரை மர்மநபர்கள் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இறந்து கிடந்த பெண்ணின் பெயர் விவரம் குறித்து விசாரிக்கும் போது அவர் உடுமலை காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரின் மனைவி தனலட்சுமி என்பது தெரியவந்தது. மனநிலை பாதிக்கப்பட்ட அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்தநிலையில் அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடுமலை அருகே மாடுகளை மேய்க்க சென்ற பெண் கொலை செய்யப்பட்டார். தற்போது மனநிலை பாதிக்கப்பட்ட பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News