வாலாஜாபாத்தில் பேரூராட்சி தொழிலாளி பீர்பாட்டிலால் குத்திக் கொலை
- குடிபோதை தகராறில் வாலிபரை நண்பரே பீர்பாட்டிலால் குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிரியதர்ஷனை தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத், நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் வினித்குமார் (வயது24) வாலாஜாபாத் பேரூராட்சியில் தற்காலிக பணியாளராக வேலைபார்த்து வந்தார்.
இவர் நேற்று இரவு அதே பகுதியில் தனது நண்பர்களுடன் முக்கண்ணி அம்மன் கோயில் தெரு பகுதியில் மதுகுடித்ததாக தெரிகிறது. அப்போது நண்பர்களுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த நண்பர்களில் ஒருவரான பிரியதர்ஷன் என்பவர் அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து வினித் குமாரின் கழுத்தில் பலமாக குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த வினித் குமார் ரத்த வெள்ளத்தில் அங்கேயே மயங்கி விழுந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த உடன் இருந்த நண்பர்கள் வினித்குமாரை மீட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே வினித்குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடனே அங்கிருந்த பிரியதர்ஷன் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து வாலாஜாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய பிரியதர்ஷனை தேடி வருகின்றனர்.
குடிபோதை தகராறில் வாலிபரை நண்பரே பீர்பாட்டிலால் குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.