உள்ளூர் செய்திகள்

ஒரு மாதமாக ஆடுகளை கொன்று வரும் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்- கிராம மக்கள் கோரிக்கை

Published On 2023-10-28 11:21 IST   |   Update On 2023-10-28 11:21:00 IST
  • சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.
  • சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி தொடர்ந்து ஆடுகளை வேட்டையாடி வந்தது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த கொங்கம்பாளையம் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் உள்ளனர். இவர்கள் தங்களது வீடு, தோட்டங்களில் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகளை அதிக அளவில் வளர்த்து வருகிறார்கள்.

கொங்கம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவர் தனது பட்டியில் ஏராளமான ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த கிராமம் அருகே அரசனாம்பாளையம் மலைக்கரடு உள்ளது. இந்த பகுதியில் கடந்த ஒரு மாதமாக சிறுத்தை ஒன்று பதுங்கி இருந்து கோபால் பட்டியில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த ஆடுகளை கொன்று வருகிறது. இதுவரை அந்த சிறுத்தை கோபாலின் 4 ஆடுகளை கொன்று உள்ளது.

இதையடுத்து அட்டகாசம் செய்து வரும் சிறுத்தை பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையேற்று வனத்துறையினர் சார்பில் ஏற்கனவே அந்த கிராமத்தில் கண்காணிப்பு கேமராக்கள், கூண்டுகள் வைக்கப்பட்டிருந்தன. ஆனாலும் சிறுத்தை கூண்டில் சிக்காமல் போக்கு காட்டி தொடர்ந்து ஆடுகளை வேட்டையாடி வந்தது.

இந்நிலையில் நேற்று இரவும் கோபால் பட்டியில் புகுந்த சிறுத்தை அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டை கடித்துள்ளது. இன்று காலை பட்டிக்கு வந்த கோபால் ஆடு, சிறுத்தை தாக்கி இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் அந்த பகுதியில் இருந்த கால் தடயங்களை சேகரித்தனர். சிறுத்தை மீண்டும் கிராமத்துக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடி உள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை வனத்துறையினர் விரைந்து போர்க்கள அடிப்படையில் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே கடந்த சில நாட்களாக அறச்சலூர் அருகே சிறுத்தை புகுந்து ஆடு, மாடுகளை தொடர்ந்து கொன்று வருகிறது. இதனால் வனத்துறையினர் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கூண்டு வைத்தும், பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராவையும் பொருத்தி உள்ளனர். இதேப்போல் தாளவாடி அருகேயும் கிராமத்துக்குள் புகுந்த சிறுத்தை கால்நடைகளை வேட்டையாடி உள்ளது. தொடர்ந்து சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News