உள்ளூர் செய்திகள்

தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பு- வீராணம் ஏரி ஓரிரு நாளில் நிரம்பும்

Published On 2022-07-25 04:27 GMT   |   Update On 2022-07-25 04:27 GMT
  • வீராணம் ஏரிக்கு 20,208 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.
  • சென்னை மாநகர் குடிநீருக்காக 68 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

காட்டுமன்னார்கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் நீர்மட்டம் 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம 44,856 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறுகிறது. அதோடு சென்னை மாநகரின் குடிநீருக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

இந்த ஏரிக்கு பருவகாலங்களில் பெய்யும் மழை மேட்டூர் அணை மூலம் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டது. அதன்படி வீராணம் ஏரிக்கு மேட்டூர் அணை தண்ணீர் கடந்த மாதம் வந்து சேர்ந்தது. இதனால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது.

கடந்த வாரம் மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் அணையில் இருந்து 1.10 லட்சம் கனஅடி உபரி நீர் வெளியேற்றப்பட்டது. இந்த தண்ணீர் காவிரி, கொள்ளிடம் ஆறு வழியாக கடலில் பாய்ந்தது.

வீராணம் ஏரிக்கு கொள்ளிடத்தில் இருந்து கீழணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படும். அங்கிருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து இருக்கும்.

தற்போது கொள்ளிடத்தில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அதிக அளவில் திறந்துவிடப்பட்டது. இதனால் ஏரியின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 45.45 அடியாக உயர்ந்தது.

வீராணம் ஏரிக்கு 20,208 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை மாநகர் குடிநீருக்காக 68 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், வீராணம் ஏரிக்கு நாளுக்குநாள் தண்ணீர் வரத்து அதிகம் உள்ளது. இதேபோன்று தொடர்ந்து நீர்வரத்து இருந்தால் இன்னும் ஓரிருநாளில் வீராணம் ஏரி நிரம்பிவிடும். அதன் பின்னர் பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Tags:    

Similar News