உள்ளூர் செய்திகள்

வீராணம் ஏரியின் நீர் மட்டம் உயர்வு- ஓரிரு நாட்களில் முழு கொள்ளளவை எட்டுகிறது

Published On 2023-07-10 09:49 IST   |   Update On 2023-07-10 09:49:00 IST
  • வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக விநாடிக்கு 175 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
  • சென்னை குடிநீருக்கு நேற்று மட்டும் 50 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தினந்தோறும் 30 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.

காட்டுமன்னார்கோவில்:

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. இது கடலூர் மாவட்ட மிகப்பெரிய நீராதாரம் ஆகும்.

இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி, வட்டங்களில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது. ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த வீராணம் ஏரியில் இருந்து தொடர்ந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் கடும் வெயிலால் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் ஏரியில் நீர் மட்டம் குறைந்தது.

இதனையடுத்து கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டத்தில் மழை மற்றும் மேட்டூர் தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக கீழணைக்கு வருகிறது. வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 42.50 அடியாக உள்ளது.

வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக விநாடிக்கு 175 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்கு நேற்று மட்டும் 50 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தினந்தோறும் 30 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இந்த ஏரியில் இருந்து அதனை சுற்றியுள்ள விவசாய பாசன வசதிக்கு தண்ணீர் திறப்பது பற்றி விவசாயிகள் கூட்டம் நடத்தி அவர்கள் தெரிவித்த பின்னர் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். மேட்டூரில் இருந்து தண்ணீர் வரத்து வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருப்பதால் இன்னும் சில நாட்களில் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிவிடும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News