உள்ளூர் செய்திகள்

வடலூரில் தி.மு.க. நகர செயலாளரை கொலை செய்ய முயற்சி- கார்டிரைவருக்கு கத்தி வெட்டு

Published On 2022-12-09 15:42 IST   |   Update On 2022-12-09 15:42:00 IST
  • காரை ஒட்டி வந்த அருண்குமார் காரை விட்டு இறங்கவே அவரை கத்தியால் வெட்டி விட்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டார்கள்.
  • போலீசார் சம்பவ இடத்திலிருந்து வீச்சரிவாள், 2 டீ சர்ட் ஆகியவற்றை கைப்பற்றினர்.

வடலூர்:

வடலூர் பார்வதிபுரம் இந்திரா நகரை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது 38). இவர் வடலூர் தி.மு.க. நகர செயலாளராக உள்ளார். இவர் நேற்று மாலை 6 மணிக்கு பார்வதிபுரத்தில் உள்ளவீட்டில் இருந்து, தனது காரில் வடலூருக்கு வந்தார்.

அந்த காரை இவரது நண்பரும், அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் (39) ஓட்டி வந்தார். கார் வடலூர் அரசு பிற்படுத்தப்பட்ட பெண்கள் விடுதிக்கு பின்புறம் வந்தபோது அங்கு மோட்டர் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் காரை வழிமறித்து தமிழ்செல்வனை வெட்ட முயன்றனர், இதில் கார் கண்ணாடி உடைந்தது.

அப்போது காரை ஒட்டி வந்த அருண்குமார் காரை விட்டு இறங்கவே அவரை கத்தியால் வெட்டி விட்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடி விட்டார்கள். தலையில் பலத்த காயம் அடைந்த அருண்குமார் குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

தி.மு.க. நகர செயலாளர் தமிழ்ச்செல்வன் வடலூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் மர்ம நபர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து உட்கட்சி பிரச்சனையா‍‌? அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்திவருகின்றனர்.

போலீசார் சம்பவ இடத்திலிருந்து வீச்சரிவாள், 2 டீ சர்ட் ஆகியவற்றை கைப்பற்றினர். தமிழ்ச்செல்வன் நகர செயலாளராக நியமிக்கப்பட்டு ஒரு மாதமே ஆன நிலையில் நடந்துள்ள இச்சம்பவம் வடலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News