குடிநீர் குழாய் பதிக்க பள்ளம் தோண்டியபோது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
- சிகிச்சை பலனின்றி பிரதாப் பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்துக்கோட்டை:
ஊத்துக்கோட்டை அருேக உள்ள மோவூர், காலனி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் பிரதாப் (வயது30). தொழிலாளி.
அதேபகுதியை சேர்ந்த பிரதாப்பின் நண்பர் ஒருவர் புதிதாக வீடு கட்டி உள்ளார். இதற்கு குடிநீர் இணைப்பு கொடுப்பதற்காக பள்ளம் தோண்டும் பணியில் பிரதாப் ஈடுபட்டார். அப்போது அருகில் இருந்த ஒரு வீட்டின் சுற்றுச்சுவர் அருகே பள்ளம் தோண்டினார். இதில் அந்த சுற்றுச்சுவரின் ஒரு பகுதி திடீரென இடிந்து பிரதாப் மீது விழுந்தது. இதில் அவர் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பிரதாப் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பென்னாலூர் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.