ஒகேனக்கல்லில் தடையை மீறி அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள்
- கர்நாடக மாநிலம் பெங்களூரு, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் மற்றும் ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
- இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
பென்னாகரம்:
கர்நாடக மற்றும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது.
மேலும் கர்நாடக மாநிலம் பெங்களூரு, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல் மற்றும் ஒகேனக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது.
இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
நீர்வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் நேற்று தடை வித்தது. மறுஉத்தரவு வரும் வரை சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் கூடாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் இன்று ஞாயிற்றுகிழமை விடுமுறை தினம் என்பதால் ஒகேனக்கல்லில் வழக்கத்திற்கு மாறாக சுற்றுலா பயணிகள் கூட்டம் இருந்தது.
மாவட்ட நிர்வாகம் விதித்த தடையை மீறி இன்று ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தனர்.
அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார்கள் இதனை கண்டு கொள்ளவில்லை என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். மேலும் காவிரி ஆற்றிலும் குளித்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.