உள்ளூர் செய்திகள்

திருத்தணி அருகே தி.மு.க. பிரமுகர் வெட்டிக்கொலை

Published On 2022-08-09 08:40 GMT   |   Update On 2022-08-09 08:40 GMT
  • திருத்தணி, ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்.
  • தி.மு.க.பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருத்தணி:

திருத்தணி, ஜெ.ஜெ.நகர் பகுதியைச் சேர்ந்தவர் மோகன்(வயது38). தி.மு.க. பிரமுகர். இவர் நேற்று இரவு 10 மணியளவில் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தார். பின்னர் அவர் வீட்டின் அருகே செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் திடீரென கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர்.

அதிர்ச்சி அடைந்த மோகன் கொலைவெறி கும்பலிடம் இருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.

ஆனாலும் அவரை ஓட, ஓட விரட்டி வெட்டினர். இதில் தலை, மார்பு, கழுத்தில் பலத்த வெட்டுக் காயம் அடைந்த மோகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருத்தணி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகளை பிடிக்க டி.எஸ்.பி. விக்னேஷ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. கொலையாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலையுண்ட மோகனுக்கு கல்பனா என்ற மனைவியும் 2 பெண்குழந்தைகளும் உள்ளனர். மோகன் மீது ஏற்கனவே 10-க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் இருப்பதாக தெரிகிறது. அவர் ரியல்எஸ்டேட், பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார்.

மேலும் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்று வந்ததாகவும் தெரிகிறது. இது தொடர்பாக சிலருடன் மோகனுக்கு மோதல் இருந்துள்ளது.

இதில் அவரால் பாதிக்கப்பட்ட நபர்கள் திட்டமிட்டு மோகனை தீர்த்து கட்டிஉள்ளனர். இது தொடர்பாக மோகனுடன் கடைசியாக செல்போனில் பேசியவர்கள் யார்? என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகின்றனர்.

தி.மு.க.பிரமுகர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News