உள்ளூர் செய்திகள்

நெல்லையில் வாலிபர் வெட்டிக்கொலை- உடல் தண்டவாளத்தில் வீச்சு

Published On 2022-10-10 14:20 IST   |   Update On 2022-10-10 14:20:00 IST
  • உடலில் வேறு எந்த இடத்திலும் காயங்கள் இல்லை என்பதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
  • மர்மநபர்கள் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு உடலை தண்டவாளத்தில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

நெல்லை:

நெல்லை டவுன் குறுக்குத்துறை பகுதியில் ரெயில்வே தண்டவாளத்தில் ஒரு ஆண் பிணம் கிடந்தது.

இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் இதை பார்த்து நெல்லை சந்திப்பு போலீசாருக்கும், ரெயில்வே போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு உதவி கமிஷனர் அண்ணாத்துரை, இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன், ரெயில்வே இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் விரைந்து சென்றனர்.

அங்கு தண்டவாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் ரெயிலில் அடிபட்டு இறந்திருக்கலாம் என கருதி போலீசார் விசாரணை நடத்தினர்.

ஆனால் ரெயிலில் அடிபட்டது போன்ற காயங்கள் எதுவும் அவரது உடலில் இல்லை. பொதுவாக ரெயிலில் அடிபட்டால் உடல் துண்டாகும் அல்லது உடல் பாகங்கள் சிதறி கிடக்கும். ஆனால் பிணமாக கிடந்தவரின் தலையில் மட்டும் பலத்த வெட்டுக்காயம் இருந்தது.

உடலில் வேறு எந்த இடத்திலும் காயங்கள் இல்லை என்பதால் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

மர்மநபர்கள் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு உடலை தண்டவாளத்தில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

இதையடுத்து கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார் ? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News