தூத்துக்குடியில் விபத்தில் சிக்கிய ஆட்டோ தீப்பிடித்து எரிந்தது- போலீசார் விசாரணை
- விபத்திற்குள்ளான அந்த ஆட்டோ தீ பற்றி எரிந்துள்ளது. இதனால் அப்பகுதியே புகை மூட்டமாக காணப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் திருமுருகன். (வயது 45). இவர் தனது மனைவி தங்கேஸ்வரியுடன் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் நெல்லை-தூத்துக்குடி சாலையில் கோரம்பள்ளம் மறவன்மடம் அருகே உள்ள தனியார் விடுதி அருகே வந்து கொண்டிருந்தார்.
அப்போது பின்னால் வந்த ஆட்டோ அவரது இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட திருமுருகன் அவரது மனைவி தங்கேஸ்வரி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் விபத்தில் சிக்கிய இருசக்கர வாகனம், ஆட்டோவும் அருகில் இருந்த பள்ளத்தில் விழுந்தது கிடந்தது. ஆட்டோ ஓட்டுனர் ஆட்டோவை அப்படியே விட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று காலை விபத்திற்குள்ளான அந்த ஆட்டோ தீ பற்றி எரிந்துள்ளது. இதனால் அப்பகுதியே புகை மூட்டமாக காணப்பட்டது. தொடர்ந்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீ அணைக்கப்பட்டது.
இது குறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் அந்த ஆட்டோ புதுக்கோட்டை பகுதியை சேர்ந்தவருடையது என்பது தெரியவந்தது. மேலும் அந்த ஆட்டோ எப்படி தீப்பிடித்து எரிந்தது? யாரேனும் திட்டமிட்டு தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.