உள்ளூர் செய்திகள்

முத்துப்பேட்டை அருகே வீட்டில் நாட்டு வெடிக்குண்டு தயாரித்தவர் தலைமறைவு

Published On 2022-11-22 17:42 IST   |   Update On 2022-11-22 17:42:00 IST
  • முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம்.
  • நாட்டு வெடிக்குண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட சணல், திரி, மருந்து உள்ளிட்ட மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள தில்லைவிளாகம் கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 54). இவர் நாகை மாவட்டம் வாய்மேடு பகுதியில் அரசு அங்கீகாரம் பெற்ற ஒரு நாட்டு வெடி தயாரிக்கும் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் இவர் உரிய அனுமதியின்றி சட்ட விரோதமாக தனது வீட்டின் கொட்டகையில் நாட்டு வெடிக்குண்டு தயாரித்து கொண்டிருந்தார். இது பற்றிய ரகசிய தகவல் முத்துப்பேட்டை போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு புறப்பட்டனர். இதனை அறிந்த கல்யாணசுந்தரம் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

இதனை தொடர்ந்து போலீசார் கொட்டகை முழுவதும் சோதனையிட்டனர். அதில் நாட்டு வெடிக்குண்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட சணல், திரி, மருந்து உள்ளிட்ட மூலப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஏதாவது அசம்பாவித சம்பவத்தை நிகழ்த்த கல்யாணசுந்தரம் நாட்டு வெடிக்குண்டு தயாரித்தாரா? அல்லது வேறு யாராவது கொடுத்த ஆர்டரின் பேரில் தயாரித்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி அவரை தேடி வருகின்றனர்.

அவரை பிடித்து விசாரித்தால் உண்மை தன்மை தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

ஏற்கனவே கோவை கார் வெடிப்பு, மங்களூர் குக்கர் வெடிக்குண்டு வெடிப்பு உள்ளிட்ட பயங்கரவாத சம்பவம் நடந்த நிலையில் தற்போது நாட்டு வெடிக்குண்டு தயாரிக்கும் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News