உள்ளூர் செய்திகள்

அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க தாமதம: 2 வயது குழந்தை உயிரிழப்பு- உறவினர்கள் போராட்டம்

Published On 2023-01-22 12:14 IST   |   Update On 2023-01-22 12:14:00 IST
  • குழந்தைக்கு 2 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததால் தாரமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பார்த்து வந்துள்ளனர்.
  • குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமல் குழந்தையை அனுப்பி வைத்ததால் தான் குழந்தை இறந்ததாக கூறி பெற்றோர் கதறி அழுதனர்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் 5-வது வார்டு வெட்னி கரடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 35)-பிரியா (27).

இந்த தம்பதிக்கு திலீப் (2) என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு 2 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்ததால் தாரமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று இரவு மீண்டும் வயிற்று போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் தாரமங்கலம் அரசு மருத்துவமனைக்கு இரவு 7 மணிக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர், மேல் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினார்.

ஆனால் குழந்தையின் பெற்றோர் தனியார் ஆம்புலன்ஸில் சேலம் அரசு மருத்துவமனைக்கு 8 மணிக்கு கொண்டு சென்றனர். அங்கு அனுமதி செய்வதற்கு ஒரு மணி நேரம் தாமதம் ஆனதாக தெரிகிறது.

அதன்பிறகு டாக்டர்கள் சிகிச்சை அளிக்க சென்றபோது சிறிது நேரத்தில் குழந்தை இறந்து விட்டது.

இதனால் இன்று காலை ஈஸ்வரன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தாரமங்கலம் அரசு மருத்துவ மனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்காமல் குழந்தையை அனுப்பி வைத்ததால் தான் குழந்தை இறந்ததாக கூறி பெற்றோர் கதறி அழுதனர்.

Tags:    

Similar News