உள்ளூர் செய்திகள்

திருப்பத்தூர் அருகே காதல் தகராறில் வாலிபர் அடித்து கொலை

Published On 2023-11-13 09:38 GMT   |   Update On 2023-11-13 09:38 GMT
  • படுகாயம் அடைந்த சுகேஷ் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் மீது அடிதடி வழக்கு பதிவு செய்தனர்.

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் அருகே உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் சங்கர் மகன் சுகேஷ் என்கிற சாமுவேல் (வயது 18). இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவரும் அதே பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் சுகேஷ் மற்றும் கார்த்திக் ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுகேஷ், கார்த்திக்கை தாக்கியுள்ளார்.

இது குறித்து கார்த்திக் தனது தந்தையிடம் நடந்ததை கூறினார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திக் மற்றும் அவரது தந்தை செல்வம் (45), அவரது மளிகை கடையில் வேலை செய்யும் பாலாஜி(20), முத்து (35) உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து சுகேஷை இரும்பு ராடல் சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த சுகேஷ் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து சுகேஷ் கொடுத்த புகாரின் பேரில் திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கார்த்திக் உள்ளிட்ட 4 பேர் மீது அடிதடி வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் அவர்களை கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து சுகேஷ், மேல் சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சுகேஷ் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் அடிதடி வழக்கை, கொலை வழக்காக மாற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News