உள்ளூர் செய்திகள்

பரமக்குடியில் கல்லூரி பேராசிரியரை கண்டித்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

Published On 2023-02-14 06:28 GMT   |   Update On 2023-02-14 06:28 GMT
  • சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • தகவல் அறிந்த பரமக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

பரமக்குடி:

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியர் ஒருவர் மாணவிகளிடம் செல்போனில் ஆபாசமாகவும், ஜாதி ரீதியாகவும் பேசி தொல்லை தருவதாக புகார் எழுந்தது.

இது தொடர்பாக அந்த பேராசிரியர் மாணவிகளிடம் பேசிய ஆடியோவும் வெளியானது. இதனால் கல்லூரி மாணவ-மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனை கண்டித்தும், சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் இன்று 200க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரிக்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்த பரமக்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். புகார் தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News