உள்ளூர் செய்திகள்

துபாயிலிருந்து மதுரை வந்த விமான பயணியிடம் ரூ.11 லட்சம் மதிப்பிலான கடத்தல் தங்கம் மீட்பு

Published On 2024-03-22 08:21 GMT   |   Update On 2024-03-22 08:21 GMT
  • விமான பயணிகளிடமும், அவர்களின் உடமைகளையும் அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.
  • சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் நடத்திய சோதனையில் 160 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பிடிப்பட்டது.

மதுரை:

மதுரை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான சேவை அளிக்கப்பட்டு வருகிறது. சமீப காலமாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வருவது அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் துபாயில் இருந்து மதுரை வரும் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து துபாயிலிருந்து மதுரை வந்த விமான பயணிகளிடமும், அவர்களின் உடமைகளையும் அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்தனர்.

அப்போது மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த மண்டையன் மகன் பாக்கியம் என்பவரிடம் நடைபெற்ற சோதனையில் அவர் கொண்டு வந்த எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அதன்பேரில் அந்த பொருட்களை அதிநவீன ஸ்கேனர் மூலம் சோதனை செய்ததில் அதில் மறைத்து தங்கம் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது.

அதனையடுத்து சுங்க இலாகா வான் நுண்ணறிவு பிரிவினர் நடத்திய சோதனையில் 160 கிராம் எடையுள்ள கடத்தல் தங்கம் பிடிப்பட்டது. அதன் மதிப்பு ரூ.10 லட்சத்து 88 ஆயிரத்து 320 ஆகும். இதனைத் தொடர்ந்து சுங்க இலாக வான் நுண்ணறிவு பிரிவினர் பாக்கியத்திடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News