உள்ளூர் செய்திகள்

ஒத்தக்கடை அருகே கல்குவாரியில் மூழ்கி அக்காள்-தங்கை பலி

Published On 2023-05-22 05:02 GMT   |   Update On 2023-05-22 05:02 GMT
  • நீச்சல் தெரியாததால் இருவரும் கல்குவாரியில் ஓரமாக நின்று குளித்தனர்.
  • கல்குவாரிக்குள் மூழ்கி கிடந்த விஜயலட்சுமி, பூங்கொடி ஆகிய இருவரது உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

மேலூர்:

திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் வி.எஸ்.குரும்பப்பட்டியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மகள்கள் விஜய லட்சுமி(வயது48), பூங்கொடி(45).

இவர்களில் விஜய லட்சுமிக்கு திருமண மாகவில்லை. பூங்கொடிக்கு திருமணமாகி விட்டது. அவர் தனது கணவர் சின்னையா மற்றும் மகன் பகவதி(23), சந்தியா(19) ஆகியோருடன் அதே ஊரில் வசித்து வந்தார்.

விஜயலட்சுமியும், பூங்கொடியும் சமையல் வேலை பார்த்து வந்தனர். அவர்கள் உள்ளூர் மட்டு மின்றி வெளியூர்களுக்கும் சமையல் வேலைக்காக சென்று வந்திருக்கின்றனர்.அதேபோல் நேற்று மதுரை ஒத்தக்கடை அருகே உள்ள சிதம்பரம்பட்டி கிராமத்திற்கு சமையல் வேலைக்காக வந்துள்ளனர்.

அப்போது அவர்கள் ஒத்தக்கடையில் உள்ள நரசிங்கபெருமாள் கோவிலுக்கு சாமி கும்பிட செல்ல திட்டமிட்டனர். இதற்காக அந்த பகுதியில் உள்ள கல்குவாரிக்கு நேற்று மாலை குளிக்க சென்றனர்.நீச்சல் தெரியாததால் இருவரும் கல்குவாரியில் ஓரமாக நின்று குளித்தனர்.

அப்போது அவர்களில் ஒருவர் திடீரென ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார். இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதனை பார்த்த மற்றொருவர் அவரை காப்பாற்ற முயன்றுள்ளார்.அப்போது அவரும் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டார்.

இதனால் இருவரும் தண்ணீரில் தத்தளித்தப்படி இருந்தனர். பெண்கள் இருவர் தண்ணீரில் தத்தளித்ததை அந்த பகுதியில் நின்றுகொண்டிருந்தவர்கள் பார்த்தனர். இருவரையும் அவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் இருவரும் தண்ணீரில் மூழ்கி விட்டனர்.

இதுகுறித்து மதுரை தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நிலைய அலுவலர் அசோக்குமார் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கல்குவாரியில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

2 மணி நேரத்திற்கு மேலாக தேடியும் இருவரும் கிடைக்கவில்லை. பின்பு இரவு வெகுநேரம் ஆகி விட்டதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. சகோதரிகள் இருவரும் கல்குவாரியில் மூழ்கிய தகவல் அறிந்த அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நேற்று இரவே ஒத்தக்கடை பகுதிக்கு வந்தனர்.

மேலும் ஏராளமான பொதுமக்களும் கல்குவாரியில் திரண்டனர். அவர்களின் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் இன்று காலை மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டார்கள். ஒத்தக்கடை போலீசாரும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

இந்நிலையில் கல்குவாரிக்குள் மூழ்கி கிடந்த விஜயலட்சுமி, பூங்கொடி ஆகிய இருவரது உடல்களையும் தீயணைப்பு வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். சகோதரிகளின் உடலை பார்த்து அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதனர்.

இதனை தொடர்ந்து இருவரது உடலையும் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, சப்-இன்ஸ்பெக்டர் சேது மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சமையல் வேலைக்கு வந்த இடத்தில் கல்குவாரியில் மூழ்கி அக்காள்-தங்கை பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News