உள்ளூர் செய்திகள்

செங்கோட்டையில் மனைவி மீது நாட்டு வெடி வீசிய விவசாயி

Published On 2023-04-26 09:15 GMT   |   Update On 2023-04-26 09:15 GMT
  • கோபம் அடைந்த கவுசல்யா, தனது கணவருக்கு சாப்பாடு வைத்து கொடுத்து விட்டு பெற்றோர் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார்.
  • மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த சந்தனகுமார், வயலில் பன்றிகள் அட்டகாசத்தை தடுப்பதற்காக வீட்டில் வைத்து இருந்த நாட்டு வெடியை எடுத்து மனைவி கவுசல்யா மீது வீசினார்.

தென்காசி மாவட்டம செங்கோட்டை அருகே உள்ள வல்லம் கலைஞர் காலனியை சேர்ந்தவர் சந்தனகுமார்(வயது 33). விவசாயி. இவரது மனைவி கவுசல்யா(25).

நேற்று வல்லத்தில் முப்புடாதி அம்மன் கோவிலில் கொடை விழா நடைபெற்றது. இதனால் சந்தனகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து மதுகுடித்து விட்டு வீட்டிற்கு சாப்பிட வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவருக்கும், கவுசல்யாவுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் கோபம் அடைந்த கவுசல்யா, தனது கணவருக்கு சாப்பாடு வைத்து கொடுத்து விட்டு பெற்றோர் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். அப்போது மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த சந்தனகுமார், வயலில் பன்றிகள் அட்டகாசத்தை தடுப்பதற்காக வீட்டில் வைத்து இருந்த நாட்டு வெடியை எடுத்து மனைவி கவுசல்யா மீது வீசினார்.

இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கவுசல்யா அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News