உள்ளூர் செய்திகள்

குடிநீர் தொட்டியில் கழிவுநீர் கலந்த விவகாரம்- இழப்பீடு கேட்டு மதுரை ஐகோர்ட்டில் முறையீடு

Published On 2022-12-28 08:49 GMT   |   Update On 2022-12-28 08:49 GMT
  • கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் அமர்வு முன்பு ஒரு முறையீட்டை முன்வைத்தார்.
  • புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை பல கிராமங்களிலும் தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகின்றன.

மதுரை:

புதுக்கோட்டை இடையூரில், அருந்ததியர் மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் கழிவுநீர் கலக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த தண்ணீரை குடித்த பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அந்தப்பகுதியில் ஆய்வு செய்தார். அப்போது அந்தப்பகுதியில் இரட்டைக்குவளை முறை வழக்கத்தில் இருப்பது தெரியவந்தது.

இந்தநிலையில் புதுக்கோட்டை, கறம்பக்குடியைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் வேல்முருகன், விஜயகுமார் அமர்வு முன்பு ஒரு முறையீட்டை முன்வைத்தார். அதில், புதுக்கோட்டை மாவட்டத்தை பொருத்தவரை பல கிராமங்களிலும் இது போன்ற தீண்டாமை கொடுமைகள் நடைபெற்று வருகின்றன.

ஆகவே புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் நடந்து வரும் தீண்டாமைகள் குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து, அவை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். மேலும் புதுக்கோட்டை இடையூரில் கழிவுநீர் கலக்கப்பட்ட நீரை குடித்த 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

அதற்கு நீதிபதிகள் முறையாக மனுவாக தாக்கல் செய்தால், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News