பொன்னேரி அருகே ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்தனர்- ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை
- கடன்தொல்லை காரணமாக சரவணன் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது குடும்பத்தகராறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கம் ஏ.ஏ.எம். நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது45). விவசாயியான இவர் நெல்அறுவடை எந்திரம் வைத்தும் தொழில் செய்து வருகிறார்.
இவரது மனைவி கீதா(40). இவர்களது 2-வது மகள் இந்துஜா (16). பஞ்செட்டியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.
நேற்று இரவு வழக்கம் போல் சரவணன் குடும்பத்துடன் வீட்டில் தூங்கினார். நள்ளிரவு திடீரென சரவணன் அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஒருவரை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தான் குடும்பத்துடன் விஷம் குடித்து விட்டதாக கூறி இணைப்பை துண்டித்து விட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நண்பர் அக்கம்பக்கத்தினருடன் வந்து பார்த்த போது வீட்டில் உள்ள அறையில் சரவணன், கீதா, அவர்களது மகள் இந்துஜா ஆகியோர் விஷம் குடித்த நிலையில் உயிருக்கு போராடியபடி கிடந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்கள் 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு சாப்பிட்டு முடித்ததும் சரவணன் குடும்பத்துடன் விஷம் குடித்து இருப்பது தெரிந்தது. வீட்டின் மற்றொரு அறையில் மூத்தமகள் தனியாக இருந்ததால் அவர் தப்பி இருக்கிறார்.
கடன்தொல்லை காரணமாக சரவணன் குடும்பத்துடன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது குடும்பத்தகராறு காரணமா? என்று பல்வேறு கோணங்களில் பொன்னேரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம்குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.