திருச்சி விமான நிலையத்திற்கு உடமைகளில் மறைத்து எடுத்து வந்த ரூ.3.75 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
- சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து வந்த மூன்று விமானங்களில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர்.
- பயணிகள் கொண்டு வந்த உடமைகளை அதிநவீன ஸ்கேனர் கருவி மூலம் சோதித்தனர்.
திருச்சி:
திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும், உள்நாட்டு விமான சேவையும் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்ச்சியாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் நேற்று இரவு சிங்கப்பூர், மலேசியா, துபாய் ஆகிய நாடுகளில் இருந்து வந்த மூன்று விமானங்களில் வந்த பயணிகளை மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தினர். குறிப்பாக அவர்கள் கொண்டு வந்த உடமைகளை அதிநவீன ஸ்கேனர் கருவி மூலம் சோதித்தனர்.
இதில் சுமார் 25 பயணிகளிடம் இருந்து அவர் கொண்டு வந்த உடமைகளில் மறைத்து எடுத்து வந்த சுமார் 7.50 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதன் இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.3.75 கோடி ஆகும். மேலும் இதுகுறித்து முழு தகவல்களும் விசாரணை நிறைவு பெற்ற பிறகு அதிகாரிகள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.