உள்ளூர் செய்திகள்

பொதுமக்களிடம் பணம் முதலீடு பெற்று ரூ.100 கோடி சுருட்டிய நகைக்கடை: பொதுமக்கள் முற்றுகை-பரபரப்பு

Published On 2023-10-17 16:37 IST   |   Update On 2023-10-17 16:37:00 IST
  • கவர்ச்சிகரமான அறிவிப்பை நம்பி பலரும் ரூ.5 லட்சம் முதல் 1 கோடி வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
  • கடந்த 2 மாதமாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வட்டிக்கான காசோலைகள் பணமில்லாத காரணத்தால் திரும்பி வந்தது.

திருச்சி:

திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, ஈரோடு, நாகர் கோவில், மதுரை, கும்பகோணம், பாண்டிச்சேரி உள்ளிட்ட 7 இடங்களில் பிரபல ஜுவல்லரி செயல்பட்டு வந்தது. இங்கு ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் 2 சதவீத வட்டி வீதம் என மாதம் தோறும் ரூ.10 ஆயிரமும், 10 மாத முடிவில் செய்கூலி, சேதாரம் இல்லாமல் 106 கிராம் தங்கமும் வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்பை வெளியிட்டனர்.

இதனை நம்பி பலரும் ரூ.5 லட்சம் முதல் 1 கோடி வரை முதலீடு செய்ததாக கூறப்படுகிறது. ஆரம்பத்தில் முதலீடு செய்தவர்களுக்கு வட்டிக்கான காசோலைகள் வழங்கினர். ஆனால் கடந்த 2 மாதமாக அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வட்டிக்கான காசோலைகள் பணமில்லாத காரணத்தால் திரும்பி வந்தது. இதுகுறித்து கேள்வி எழுப்பியவர்களுக்கு ஓரிரு வாரங்களில் பணம் கொடுத்து முடிப்பதாக நகை கடை சார்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் பணம் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் திருச்சி கடை தவிர மற்ற கடைகள் அனைத்தும் திடீரென மூடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வாடிக்கையாளர்கள் திருச்சி, கரூர் பைபாஸ் சாலையில் செயல்படும் நகை கடை முன்பாக திரண்டனர். பின்னர் நகைகடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த தில்லைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த நகை கடையில் ஆயிரக்கணக்கானோர் முதலீடு செய்துள்ள நிலையில் சுமார் ரூ.100 கோடிக்கு மேல் மோசடி நடைபெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் மோசடி நடந்திருக்கலாம் என்று தெரிகிறது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News