உள்ளூர் செய்திகள்

ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் 2 பேர் கைது

Published On 2022-10-17 11:45 GMT   |   Update On 2022-10-17 11:45 GMT
  • கடந்த 14-ந் தேதி மர்ம நபர்கள் லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றனர்.
  • கடத்தல் ரேஷன் அரிசியுடன் கூடிய லாரியை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

படப்பை:

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த அமரம்பேடு பகுதியில் உள்ள குன்றத்தூர்-ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலையில் கடந்த 14-ந் தேதி மர்ம நபர்கள் லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் சென்றனர். அப்போது திடீரென லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரம் உள்ள ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், லாரியில் இருந்த சுமார் 10 டன் எடையுடைய 300-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகள் நாசமானது.

இதைத்தொடர்ந்து, காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் முகேஷ் ராவ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடத்தல் ரேஷன் அரிசியுடன் கூடிய லாரியை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வந்தனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் பகுதியில் பதுங்கி இருந்த ரேஷன் அரிசி கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட லாரி உரிமையாளரான காஞ்சிபுரம் சிறு காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜானகிராமன் (வயது 38), லாரி டிரைவர் கரண் (23), ஆகிய 2 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் இவர்கள் சென்னையை அடுத்த போரூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்வது விசாரணையில் தெரியவந்தது. இவர்களிடமிருந்து 5½ டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News