61 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க சென்ற ராமேசுவரம் மீனவர்கள்
- மீன்பிடி தடை காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததால் மீனவர்கள் அதிகாலை 1 மணியளவில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.
- ராமேசுவரம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து 1200 விசைப்படகுகளில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.
ராமேசுவரம்:
ராமேசுவரம், பாம்பன் உள்பட தமிழக கடலோரப் பகுதியில் மீன் இனப்பெருக்கத்திற்காகவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் மத்திய, மாநில அரசுகள் கடந்த ஏப்ரல் மாதம் 14-ம் தேதி நள்ளிரவு முதல் ஜூன் 14-ம் தேதி நள்ளிரவு வரை 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம் விதித்திருந்தது.
இதனையொட்டி கடந்த 61 நாட்களாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தங்களது படகுகளை கடல் கரையோரத்தில் நிறுத்தி பாதுகாத்து வந்தனர். மேலும் இந்த மீன்பிடி தடைக்காலத்தில் படகுகளை சீரமைப்பது, மீன்பிடி சாதனங்களை புதுப்பிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்தனர்.
மீன்பிடி தடை காலம் நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்ததால் மீனவர்கள் அதிகாலை 1 மணியளவில் மீன்பிடிக்க புறப்பட்டு சென்றனர்.
ராமேசுவரம், பாம்பன் ஆகிய பகுதிகளில் இருந்து 1200 விசைப்படகுகளில் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். மீனவர்கள் 61 நாட்களுக்கு பின்பு மீன்பிடிக்க செல்வதால் அதிகளவில் மீன்கள் கிடைக்கும் என்று மீன்பிடி உபகரணங்களை சேகரித்துக்கொண்டு மிகுந்த ஆர்வத்துடன் சென்றனர்.
மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் கூறும்போது, நாங்கள் 61 நாட்களுக்கு பிறகு மீன்பிடிக்க செல்கிறோம். மீன் இன பெருக்கத்திற்காக ஆண்டுதோறும் மீன்பிடி தடைக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த காலத்தில் எங்களுக்கு வருமானம் கிடைக்காது. தற்போது மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதால் எங்களுக்கு அதிகளவில் வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.