உள்ளூர் செய்திகள்

ராஜகணபதி கோவில் இடித்து அகற்றப்படும் காட்சி.

பொத்தனூரில் பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் அகற்றம்- பக்தர்கள் அதிர்ச்சி

Published On 2023-07-15 13:25 IST   |   Update On 2023-07-15 13:25:00 IST
  • சாக்கடை அமைக்கும் பணிக்காக, ராஜகணபதி கோவிலை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.
  • பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க விநாயகர் சிலையை சேதம் இன்றி எடுத்து அதிகாரிகள் வேறு இடத்தில் வைத்தனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்-ஜேடர்பாளையம் செல்லும் சாலையில் உள்ள பொத்தனூரில் நெடுஞ்சாலை அருகே பிரசித்தி பெற்ற ராஜகணபதி கோவில் உள்ளது. இங்குள்ள விநாயகருக்கு தினசரி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.

இந்த நிலையில் இப்பகுதியில் சாலையோரம் சாக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சாக்கடை அமைக்கும் பணிக்காக, ராஜகணபதி கோவிலை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர்.

தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான இடத்தில் இருந்த இந்த கோவிலை நெடுஞ்சாலைத்துறையினர், பொக்லைன் எந்திரத்தின் மூலம் முற்றிலுமாக அகற்றினர். இதனால் பக்தர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க விநாயகர் சிலையை சேதம் இன்றி எடுத்து அதிகாரிகள் வேறு இடத்தில் வைத்தனர்.

தொடர்ந்து பரமத்திவேலூர் 4 ரோடு சாலைகளில் இருந்து பொத்தனூர் எம்.ஜி.ஆர் சிலை வரையிலும் சாக்கடை அமைக்கும் பணி நடப்பதால் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் தாங்களாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பல ஆண்டுகளாக இக்கோவிலில் வழிபட்டு வருகிறோம். அதிகாரிகள் திடீரென கோவிலை இடித்தது மன வேதனையாக உள்ளது. சாக்கடை கால்வாயை அதிகாரிகள் மாற்றி அமைத்திருக்கலாம் . ஆனால் அதிகாரிகள் இவ்வாறு செய்யவில்லை என்றனர்.

Tags:    

Similar News