உள்ளூர் செய்திகள்

துப்பாக்கி சூட்டில் பலியான ராணுவ வீரர் யோகேஷ்குமார்.

பஞ்சாப்பில் உயிரிழந்த தேனி ராணுவ வீரர்- ஒரே மகனையும் பறிகொடுத்த விவசாயி குடும்பத்தினர்

Published On 2023-04-13 04:29 GMT   |   Update On 2023-04-13 05:43 GMT
  • சாதாரண ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த யோகேஷ்குமார் தான் ராணுவத்தில் சேர்ந்து தனது குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்று கடுமையாக உழைத்துள்ளார்.
  • பிளஸ்-2 வரை தேனியில் படித்த யோகேஷ்குமார் அதன் பிறகு உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் படித்து முடித்தார்.

உத்தமபாளையம்:

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமில் நேற்று அதிகாலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 வீரர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதில் உயிரிழந்த ஒருவர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த யோகேஷ் குமார் (வயது 25) என்பது தெரிய வந்துள்ளது.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள மூணாண்டிபட்டியைச் சேர்ந்த விவசாயி ஜெயராஜ். இவரது மனைவி ரத்தினம். இவர்களுக்கு 2 மகள்களும், யோகேஷ்குமார் என்ற ஒரே மகனும் உள்ளனர். 2 மகள்களுக்கும் திருமணம் ஆகி விட்டது.

சாதாரண ஏழை விவசாய குடும்பத்தைச் சேர்ந்த யோகேஷ்குமார் தான் ராணுவத்தில் சேர்ந்து தனது குடும்பத்தை முன்னேற்ற வேண்டும் என்று கடுமையாக உழைத்துள்ளார். தந்தைக்கு விவசாயத்திற்கு உதவியாக இருந்து விட்டு மாலையில் கடுமையான உடற்பயிற்சி செய்து வந்தார். பிளஸ்-2 வரை தேனியில் படித்த யோகேஷ்குமார் அதன் பிறகு உசிலம்பட்டியில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியில் படித்து முடித்தார்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவத்தில் சேர்ந்த அவர் தனது கடுமையான உழைப்பினாலும் உயர் அதிகாரிகளுக்கு கீழ்படிந்து பணி செய்ததாலும் அனைவரிடமும் நன்மதிப்பை பெற்று வந்துள்ளார். இன்னும் திருமணம் ஆகாத யோகேஷ்குமாருக்கு அடுத்த ஆண்டு திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் தனது ஒரே மகனை பறிகொடுத்த ஜெயராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த பொங்கல் விடுமுறையின் போது ஊருக்கு வந்த யோகேஷ்குமார் தனது சகோதரிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தினார்.

விடுமுறைக்கு எப்போது சொந்த ஊருக்கு வந்தாலும் தனது சகோதரிகள் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். மேலும் சொந்த ஊரிலும் யோகேஷ்குமார் நல்ல முறையில் அறியப்பட்டு அனைவரிடத்திலும் பாசத்துடன் பழகி வந்துள்ளார்.

சிறு வயது முதலே கஷ்டப்பட்டு ராணுவத்தில் வேலைக்கு சேர்ந்ததால் அவரது நண்பர்களையும் ராணுவத்தில் சேர்க்க உதவி வந்துள்ளார். மேலும் பல ஆண்டுகள் ராணுவத்தில் பணிபுரிந்து சாதனை படைப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் துரதிஷ்டவசமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யோகேஷ்குமாரின் உடல் இன்று மாலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் அவரது ஊரில் அடக்கம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகிறது. யோகேஷ்குமாரின் மறைவு மூணாண்டிபட்டி மட்டுமின்றி சுற்றுப்புற கிராம மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Tags:    

Similar News