தாளவாடி அருகே ஆட்டை கடித்துக் கொன்ற சிறுத்தையால் மீண்டும் பரபரப்பு
- ஆடு ஒன்று கழுத்தில் கடிபட்டு இறந்து கிடந்தது.
- சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து பிடிக்க வேண்டும் என்றனர்.
தாளவாடி:
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. ஜீர்கள்ளி வனச்சரகத்தில் உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வபோது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு போன்ற கால்நடைகளை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று இரவு சிமிட்டஹள்ளி பகுதியை சேர்ந்த முருகேஷ் (38) விவசாயி ஆடு, மாடுகள் வளர்த்து வருகிறார். வழக்கம் போல் வீட்டின் முன்பு ஆட்டை கட்டி வைத்து விட்டு தூங்க சென்ற விட்டார். காலையில் எழுந்து பார்த்த போது தனது ஆடு ஒன்று கழுத்தில் கடிபட்டு இறந்து கிடந்தது.
இது பற்றி ஜீர்கள்ளி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை கால்தடயங்களை ஆய்வு செய்து ஆட்டை கொன்றது சிறுத்தை என உறுதி செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது:-
கடந்த 15 நாட்களுக்கு முன்பு எங்கள் பகுதியில் ஒரு ஆட்டை சிறுத்தை கடித்துக் கொன்று உள்ளது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று மீண்டும் ஒரு ஆட்டை சிறுத்தை கடித்துக் கொண்டுள்ளது.
இதனால் நாங்கள் பீதியில் உறைந்து உள்ளோம். வனத்துறையினர் உடனடியாக இந்தப் பகுதியில் கூண்டு வைத்து சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து பிடிக்க வேண்டும் என்றனர்.