உள்ளூர் செய்திகள்

சொத்து தகராறில் மகனை சுத்தியலால் அடித்துக் கொன்ற தந்தை- போலீஸ் நிலையத்தில் சரண்

Published On 2023-06-09 06:56 GMT   |   Update On 2023-06-09 06:56 GMT
  • 3 செண்ட் நிலம் தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
  • பெற்ற மகனையே தந்தை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆத்தூர்:

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே பள்ளக்காடு நடுவீதி பகுதியை சேர்ந்தவர் விவசாயி வையாபுரி (வயது 85). இவருக்கு பூமாலை, துரைராஜ் (வயது 55) என்கிற 2 மகன்களும், சகுந்தலா என்ற 1 மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் மூத்த மகன் பூமாலை இறந்துவிட்ட நிலையில், 2-வது மகன் துரைராஜூடன், வையாபுரி வாழ்ந்து வருகிறார். இதனிடையே இவர்களுக்கு சொந்தமான 3 செண்ட் நிலம் தொடர்பாக குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக, துரைராஜின் மனைவி மல்லிகா மற்றும் அவரது மகன் கோபி, மகள் சத்யா ஆகியோர் நேற்றிரவு காமக்காபாளையத்திற்கு சென்று விட்டனர்.

இதனால் தந்தை, மகன் இருவர் மட்டும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர். அப்போது சொத்து சம்பந்தமாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

பின்னர் துரைராஜ் வீட்டின் அருகில் உள்ள மாட்டுக் கொட்டகையில் குடிபோதையில் படுத்து தூங்கினார். இதையறிந்த தந்தை வையாபுரி, வீட்டில் இருந்த பெரிய சுத்தியலை கொண்டு மகன் துரைராஜின் தலையில் பலமாக தாக்கினார். இதில், ரத்த வெள்ளத்தில் துரைராஜ் துடி துடித்து பரிதாபமாக பலியானார்.

மகன் உயிரிழந்ததை அறிந்த வையாபுரி, கொலை செய்ய பயன்படுத்திய சுத்தியலுடன் கெங்கவல்லி போலீஸ் நிலையத்தில் சரணடைந்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற கெங்கவல்லி போலீசார், கொலையான துரைராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, வையாபுரியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து பிரச்சினையில் பெற்ற மகனையே தந்தை சுத்தியால் அடித்து கொலை செய்த சம்பவம், கெங்கவல்லி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News