நாமகிரிப்பேட்டை அருகே தனியார் பஸ் டிரைவர் மர்ம மரணம்
- மோகன்ராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
- மர்மமான முறையில், வீட்டில் டிரைவர் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள முள்ளுக்குறிச்சி கரியாம்பட்டி முருகன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மாணிக்கம். இவரது மகன் மோகன்ராஜ் (வயது 33). தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி கீர்த்தனா (30).
நேற்று முன்தினம் இரவு, மோகன்ராஜ் அவரது வீட்டில் ஒரு அறையிலும், மற்றொரு அறையில் அவரது மனைவி, மகன்களும் படுத்து தூங்கினர். இந்த நிலையில் நேற்று காலையில் மோகன்ராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
அவரது உடல் அருகே மது பாட்டில் இருந்துள்ளது. அவரது முதுகில் சிறிய அளவிலான காயம் உள்ளது. இதனால் டிரைவர் மோகன்ராஜ் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.
இதுகுறித்த தகவல் அறிந்த ஆயில்பட்டி போலீசார், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மோகன்ராஜ் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் மோகன்ராஜ் கொலை செய்யப்பட்டாரா? மது போதையில் இறந்தாரா? அல்லது வேறு காரணத்தால் இறந்தாரா? என்பது தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் தடவியல் நிபுணர் வடிவேல் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தடயங்களை சேகரித்தார்.
இதனிடையே இறந்து கிடந்த மோகன்ராஜ் மலையாளபட்டியைச் சேர்ந்த அவரது நண்பர் சரவணன் என்பவரது மொபட்டை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வந்துள்ளார். அந்த மொபட்டில் சரவணன் வைத்திருந்த ரூ.80 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஒரு தங்க செயின் இருப்பது தெரியவந்துள்ளது. இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மர்மமான முறையில், வீட்டில் டிரைவர் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.