உள்ளூர் செய்திகள்

காவல் நிலைய மரணங்களை தவிர்க்க கைது செய்யப்பட்டவரின் உடல்நிலை குறித்து கேட்டறிய வேண்டும்- போலீஸ் டி.ஜி.பி.

Published On 2022-06-15 09:17 GMT   |   Update On 2022-06-15 09:17 GMT
  • கைது செய்யப்படுவதற்கு முன் குற்றம் சாட்டப்பட்டவரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிதல் வேண்டும்.
  • காவலில் வைக்கப்படுவதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனைக்கு தேவையான வசதிகள் உள்ள மாவட்ட மருத்துவமனையில் முழுமையாக செய்யப்பட வேண்டும்.

சென்னை:

போலீஸ் நிலையங்களில் கைதிகள் மரணம் அடைவதை தடுப்பதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து காவல் துறையினருக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

இதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:-

கைது செய்யப்படுவதற்கு முன் குற்றம் சாட்டப்பட்டவரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிதல் வேண்டும்.

காவலில் வைக்கப்படுவதற்கு முன்பு மருத்துவப் பரிசோதனைக்கு தேவையான வசதிகள் உள்ள மாவட்ட மருத்துவமனையில் முழுமையாக செய்யப்பட வேண்டும். உண்மையான சோதனையின்றி உடற்தகுதி சான்றிதழ் பெறும் நடை முறையை நிறுத்தி கொள்ள வேண்டும்.

போலீஸ் நிலையம், மருத்துவமனைகள், சிறைச்சாலைகள் ஆகியவற்றில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டி ருப்பதை உறுதி செய்தல் வேண்டும். போலீஸ் சித்ரவதை பற்றிய தவறான குற்றச்சாட்டை எதிர்கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.

குற்றம் சாட்டப்பட்டவர் கால்-கை வலிப்பு நோய் தொடர்பான வரலாறு குறித்து முழுமையாக சரி பார்க்கப்பட வேண்டும்.

சந்தேக நபர்களை பொதுமக்கள் அடிக்கும்போது, அவரை சம்பவ இடத்திலிருந்து இருந்து நேரடியாக 108 ஆம்புலன்ஸ் அல்லது பிற தனியார் வாகனங்கள் மூலம் மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டும். அவர்களை போலீஸ் நிலையத்திற்குள் கொண்டு வரவோ அல்லது போலீஸ் காவலில் எடுக்கவோ கூடாது.

குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்காக போலீஸ் நிலையத்திற்கு குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு வரக்கூடாது.

அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்பட்டு சரியாக வேலை செய்வதை உறுதி செய்து கொள்ளவும்.

குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடிக்கும்போது அவர்கள் கொடுங்குற்றவாளியாக இருந்தால் தவிர அவர்களை விரட்டக் கூடாது.

இவ்வாறு தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு சுற்ற றிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News