உள்ளூர் செய்திகள்

மனைவி தற்கொலை- வரதட்சணை கொடுமை வழக்கில் போலீஸ்காரர் பெற்றோருடன் கைது

Published On 2022-06-10 03:55 GMT   |   Update On 2022-06-10 03:55 GMT
  • வினீத் பாலாஜி ஒரு போலீஸ்காரராக இருந்தும் மோட்டார்சைக்கிள் வாங்கி தரும்படி கேட்டு தினம், தினம் கொடுமைப்படுத்தி உள்ளார்.
  • இதனால் வேதனையுடன் இருந்த முத்துபாண்டீஸ்வரி இந்த துயர முடிவை தேடிக்கொண்டுள்ளார்

ஊட்டி:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வினீத் பாலாஜி (வயது 29). இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டி நகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

இவருக்கும் திண்டுக்கல் சீலப்பாடி, என்.ஜி.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த முத்துபாண்டீஸ்வரி (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு தம்பதியினர் ஊட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி முத்துபாண்டீஸ்வரி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. ஊட்டி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

முத்துபாண்டீஸ்வரி தற்கொலை செய்தது பற்றி அறிந்த அவரது பெற்றோர் ஊட்டிக்கு வந்தனர். தங்கள் மகள் முத்துபாண்டீஸ்வரியை கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது கணவர் வினீத் பாலாஜி மற்றும் பெற்றோர் ராதாகிருஷ்ணன், கவிதா ஆகியோர் சித்ரவதை செய்து வந்தனர். வினீத் பாலாஜி ஒரு போலீஸ்காரராக இருந்தும் மோட்டார்சைக்கிள் வாங்கி தரும்படி கேட்டு தினம், தினம் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் வேதனையுடன் இருந்த முத்துபாண்டீஸ்வரி இந்த துயர முடிவை தேடிக்கொண்டுள்ளார். எனவே வினீத் பாலாஜி மற்றும் அவரது பெற்றோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

அதன்பேரில் வினீத் பாலாஜி, பெற்றோர் ராதாகிருஷ்ணன், கவிதா ஆகிய 3 பேர் மீது கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர். இதற்கிடையே முத்துபாண்டீஸ்வரி திருமணமாகி ஒரு வருடத்துக்குள் தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

Tags:    

Similar News