உள்ளூர் செய்திகள்

பல்லடத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை- தலைமறைவான பேராசிரியருக்கு போலீஸ் வலைவீச்சு

Published On 2023-08-18 11:43 IST   |   Update On 2023-08-18 11:43:00 IST
  • போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
  • பேராசிரியர் பாலமுருகன் மருத்துவ விடுப்பில் உள்ளதால் இன்னும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.

பல்லடம்:

திருப்பூர் மாவட்டம் பல்லடம் காந்தி சாலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இக்கல்லூரியின் தமிழ் துறை தலைவராக பாலமுருகன் பணியாற்றி வருகிறார்.

இவர் கடந்த ஓராண்டிற்கு முன்பாக நீலகிரி மாவட்டத்தில் இருந்து மாறுதலாகி பல்லடம் அரசு கல்லூரியில் தமிழ்த்துறை தலைவராக பணியில் சேர்ந்தார். இந்நிலையில் மாணவி ஒருவருக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆன்லைன் மூலமாக பெறப்பட்ட புகாரின் பேரில், திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் நன்னடத்தை அலுவலர் பல்லடம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பாலமுருகன் தலைமறைவாகி விட்டார்.அவரை போலீசார் வலைவீசி தேடி வருகினறனர்.

கல்லூரி நிர்வாகத்தினர் கூறுகையில், புகார் குறித்து தனியாக விசாரணை குழு அமைக்கப்பட்டு மாணவிகளிடம் விசாரணை நடை பெற்று வருவதாகவும், பேராசிரியர் பாலமுருகன் மருத்துவ விடுப்பில் உள்ளதால் இன்னும் அவரிடம் விசாரணை மேற்கொள்ளவில்லை என்று தெரிவித்தனர்.

Tags:    

Similar News