உள்ளூர் செய்திகள்

சேலம் அருகே மாயமான பெண் பிணமாக மீட்பு

Published On 2023-08-15 05:55 GMT   |   Update On 2023-08-15 05:55 GMT
  • கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தில் உறவினர்களுக்கும், கருப்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து லலிதா எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம்:

சேலம் கருப்பூர் அருகே உள்ள சிங்குகாடு பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லலிதா (வயது 60). இவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பரமசிவம், லலிதா இருவரும் கடந்த 6 வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லாமல் பிரிந்து வாழ்ந்து வந்தனர். நேற்று மதியம் வீட்டை விட்டு வெளியே சென்ற லலிதா இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினார்கள். ஆனால் லலிதாவை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில் ஊர் அருகே குழந்தைவேலு என்பவரது விவசாய தோட்டத்தில் உள்ள கிணற்றின் கரையில் லலிதாவின் செருப்பு கிடந்தது. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகத்தில் உறவினர்களுக்கும், கருப்பூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசாரும் ஓமலூர் தீயணைப்பு நிலைய வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இறங்கி லலிதாவின் உடலை தேடினர். வெகு நேர போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவில் லிலதா உடலை கண்டுபிடித்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து லலிதா எப்படி இறந்தார்? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News