கடலூர் புதிய பஸ் நிலையத்தை கலெக்டர் அலுவலகம் அருகே அமைக்க கோரி மனு
- கடலூரில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு புதிய கலெக்டர் அலுவலகம் அருகே இடம் ஒதுக்கப்பட்டது.
- அவ்விடம் பொதுமக்கள் அனைவருக்கும் உகந்த இடமாகவும், போக்குவரத்திற்கு ஏற்ற இடமாகவும் கருதப்பட்டது.
கடலூர்:
கடலூர் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைப்பாளர் ரவி தலைமையில் இணை ஒருங்கிணைப்பாளர்கள் சுப்புராயன், குரு ராமலிங்கம், சிவாஜிகணேசன், மன்சூர், சட்ட ஆலோசகர் திருமார்பன் ஆகியோர் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது-
கடலூரில் புதிய பஸ் நிலையம் கட்டுவதற்கு புதிய கலெக்டர் அலுவலகம் அருகே இடம் ஒதுக்கப்பட்டது. அவ்விடம் பொதுமக்கள் அனைவருக்கும் உகந்த இடமாகவும், போக்குவரத்திற்கு ஏற்ற இடமாகவும் கருதப்பட்டது. இந்த இடம் புதுச்சேரி, சென்னை, பண்ருட்டி விழுப்புரம், திருக்கோவிலூர் மார்க்கமாக செல்லும் பிரதான சாலைக்கும் கஸ்டம்ஸ் சாலைக்கும் விழுப்புரம் - நாகை விரைவு சாலைக்கும் இணைப்பு பாலமாக அமைந்து இருந்தது.
ஆனால் எம்.புதூர் பகுதியில் பஸ் நிலையம் கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிய வருகிறது. இந்த இடம் 10 கீ மீ . தூரம் உள்ளதால் பொருத்தமற்ற இடமாக உள்ளது. எனவே புதிய பஸ் நிலையத்தை முன்பு திட்டமிட்ட படி கலெக்டர் அலுவலகம் அருகே கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆகையால் தனிக்கவனம் செலுத்தி, கடலூர் பொதுமக்களுக்காக உரிய ஆய்வு செய்து, புதிய பேருந்து நிலையம் அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.