உள்ளூர் செய்திகள்
சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

புதியம்புத்தூர் அருகே மயான பாதை கேட்டு திடீர் சாலை மறியல்

Published On 2022-10-31 09:46 IST   |   Update On 2022-10-31 09:46:00 IST
  • உறவினர்கள் அழகம்மாளின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகளை செய்து முடித்து சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர்.
  • இந்த வழியாக சடலத்தை கொண்டு செல்லக்கூடாது இந்த இடம் எங்களுக்குச் சொந்தமான பட்டா நிலம் என்று அதே ஊரைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதியம்புத்தூர்:

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள மேல வேலாயுதபுரத்தை சேர்ந்த அழகம்மாள் (வயது 85) என்ற மூதாட்டி நேற்று இறந்துவிட்டார்.

அவரது உறவினர்கள் அழகம்மாளின் உடலை அடக்கம் செய்ய ஏற்பாடுகளை செய்து முடித்து சடலத்தை சுடுகாட்டிற்கு கொண்டு சென்றனர். அப்போது இந்த வழியாக சடலத்தை கொண்டு செல்லக்கூடாது இந்த இடம் எங்களுக்குச் சொந்தமான பட்டா நிலம் என்று அதே ஊரைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சடலத்தை சுடுகாட்டுக்கு கொண்டு செல்ல முறைப்படி பாதை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இறந்தவரின் உறவினர்கள் புதியம்புத்தூர்-தூத்துக்குடி சாலையில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் 50 பேர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மறியல் போராட்ட தகவல் அறிந்ததும் ஒட்டப்பிடாரம் மண்டல துணை தாசில்தார் சுமதி, வருவாய் ஆய்வாளர் சுகுணா, புதியம்புத்தூர் (பொறுப்பு) இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்-இன்ஸ்பெக்டர் பாலன் ஆகியோர் பஸ் மறியல் செய்தவர்களிடம் பேசினர்.

இன்று ஒட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் வைத்து மயான பாதை குறித்து சமாதான கூட்டம் நடத்தப்பட்டு மயான பாதைக்கு ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து பஸ் மறியல் செய்தவர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

Similar News