கடத்தி வரப்பட்ட பாம்புகள், ஆமை.
சென்னை வந்த விமானத்தில் 20 பாம்புகள்-ஆமைகள்: பயணிகள் அதிர்ச்சி
- சுங்கத்துறை அதிகாரிகள் மத்திய வனக்குற்ற பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
- சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆலந்தூர்:
தாய்லாந்து நாட்டில் இருந்து தாய் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் நேற்று நள்ளிரவு சென்னை விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த முகமது ஷகீல் (வயது 21) என்பவர் மீது அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர்.அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் வைத்திருந்த பெரிய கூடையை திறந்து சோதனை செய்தனர்.
அதில் தனித்தனி சிறிய பாக்கெட்டுகளில் மத்திய ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, செசல்ஸ் தீவு போன்றவைகளில் வசிக்கும் பாம்புகள், குரங்கு, ஆமை போன்றவைகள் கடத்தி வரப்பட்டிருந்தன. அதற்கு வேண்டிய ஆவணங்களும் அவர் வைத்திருக்கவில்லை.
இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் மத்திய வனக்குற்ற பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
வட அமெரிக்கா நாட்டில் உள்ள ராஜநாகம் என்ற விஷமற்ற 15 பாம்புகளும், மேலும் ஆப்பிரிக்காவின் மேற்கு, மத்திய பகுதிகளில் உள்ள காடுகளில் வசிக்கும் பால் பைத்தான் என்ற ஒரு வகை மலைப்பாம்பு குட்டிகள் 5, ஆப்பிரிக்க நாட்டில் செஷல்ஸ் தீவில் காணப்படும் அல்ட்ரா பிராட் டாடாஸ் என்ற ஒருவகை ஆமை வகைகள் 2, மத்திய ஆப்பிரிக்காவில் வசிக்கும் டி பிராசா மங்கி என்ற குரங்கு குட்டி 1 என மொத்தம் 23 விலங்குகள் இருந்தன.
அந்த கடத்தல் ஆசாமியிடம் சுங்க அதிகாரிகளும், மத்திய வன குற்றப்பிரிவு அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். அப்போது இவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று விட்டு, அங்கு தங்கி, இவைகளை அங்கிருந்து வாங்கி வந்தது தெரியவந்தது. இவைகளை எதற்காக வாங்கி வந்தார் என்பது தெரியவில்லை. இது விஷமற்ற பாம்பு என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனாலும் இவைகளை கொண்டு வரும்போது, முறையாக சர்வதேச வனத்துறை மற்றும் சர்வதேச சுகாதாரத் துறையிடம் சான்றுகள் பெற்று, அந்த விலங்குகளை மருத்துவ பரிசோதனை செய்தே கொண்டு வர வேண்டும். ஆனால் இந்த விலங்குகள் எதற்குமே மருத்துவ பரிசோதனை மற்றும் சான்றுகள் இல்லை. எனவே இவைகளை திருப்பி அனுப்ப அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதோடு அந்த திருப்பி அனுப்புவதற்கான செலவுகளையும் அந்த ராமநாதபுரத்தை சேர்ந்த கடத்தல் ஆசாமியிடமே வசூலிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதை இவர் எதற்காக கொண்டு வந்தார் என்பது பற்றி விசாரணை செய்கின்றனர்.
இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.