உள்ளூர் செய்திகள்

கட்சிக்கொடி கட்டுவதில் மோதல்- காந்திகிராம பல்கலைக் கழகத்தில் போலீசாருடன் வாக்குவாதம்

Published On 2022-11-10 11:05 GMT   |   Update On 2022-11-10 11:05 GMT
  • உயரமான அளவில் கட்சிக்கொடி கட்ட ஒருதரப்பினர் முயன்றனர். இதனால் அங்கு வந்த போலீசார் கட்சிக்கொடி கட்டக்கூடாது என தெரிவித்தனர்.
  • இருதரப்பினரும் கொடிகளை அகற்றுமாறு போலீசார் எச்சரித்தனர்.

சின்னாளபட்டி:

காந்திகிராம பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இதற்காக திண்டுக்கல்-மதுரை 4 வழிச்சாலையிலும், ஹெலிபேடு தளத்தில் இருந்து விழா நடைபெறும் இடம் வரையிலும் தி.மு.க. மற்றும் பா.ஜ.க. சார்பில் கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

இன்று மேலும் உயரமான அளவில் கட்சிக்கொடி கட்ட ஒருதரப்பினர் முயன்றனர். இதனால் அங்கு வந்த போலீசார் கட்சிக்கொடி கட்டக்கூடாது என தெரிவித்தனர். இருதரப்பினரும் கொடிகளை அகற்றுமாறு போலீசார் எச்சரித்தனர். அப்போது யார் முதலில் கொடியை அகற்றுவது என்பதில் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து போலீசாரே கொடியை அகற்ற முயன்றதால் அதனை தடுக்க முயன்றனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு போலீசார் கீழே விழும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு வந்து அனைத்து கொடிகளையும் அகற்ற உத்தரவிட்டார். அதன் பின் கொடிகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

அப்போது அங்கு வந்த தி.மு.க. கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில்குமார் எம்.எல்.ஏ. விழாவிற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கட்சியினர் யாரும் செயல்பட வேண்டாம் என அறிவுறுத்தி தொண்டர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News