உள்ளூர் செய்திகள்

ஆம்னிபஸ் முன்பக்க டயர் வெடித்து நடுரோட்டில் கவிழ்ந்து விபத்து

Published On 2023-12-30 06:46 GMT   |   Update On 2023-12-30 06:46 GMT
  • ஆம்னி பஸ் சாலையில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
  • விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரமத்திவேலூர்:

கர்நாடக மாநிலம் பெங்களூரிவில் இருந்து கொடைக்கானலுக்கு ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் 24 பயணிகள், 2 டிரைவர்கள், 1 கிளீனர் என மொத்தம் 27 பேர் பயணம் செய்தனர்.

இன்று அதிகாலை அதிவேகமாக சென்றுகொண்டிருந்த பஸ் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி தொலைத்தொடர்பு அலுவலகம் அருகே வந்த போது பஸ்சின் முன்பக்க டயர் வெடித்தது.

இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையின் நடுவில் உள்ள தடுப்பை தாண்டி எதிர்பக்கம் உள்ள சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் ஆம்னி பஸ்சின் கண்ணாடியை உடைத்து உள்ளே இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டனர். மேலும் விபத்து குறித்து ஆம்புலன்ஸ் மற்றும் பரமத்தி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இந்த விபத்தில் தெலுங்கானாவை சேர்ந்த ஆரியசாகர் (25), சுஷ்மா (25), சென்னையை சேர்ந்த விக்னேஷ் ஆகிய 3 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

அவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறு, சிறு காயங்களுடன் உயிர் தப்பிய 21 பேர் மீட்கப்பட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதனிடையே ஆம்னி பஸ் சாலையில் கவிழ்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பரமத்தி போலீசார் கிரேன் எந்திரம் மூலம் ஆம்னி பஸ்சை ஓரமாக நகர்த்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News