உள்ளூர் செய்திகள்

ஓமலூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது ஆண் குழந்தை பலி

Published On 2023-07-12 03:59 GMT   |   Update On 2023-07-12 03:59 GMT
  • குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
  • குழந்தை பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓமலூர்:

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டைமாரியம்மன் கோவில் ஊராட்சி வேல கவுண்டனூர் திருமலை நகர் பகுதியை சேர்ந்தவர் விஜய நாதன் (வயது 32). இவர் தனியார் கிரானைட் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திவ்யா என்ற மனைவியும் ஹரிஷ் என்ற 3 வயது ஆண்குழந்தை, ரக் ஷிதா என்ற 7 மாத பெண் குழந்தை உள்ளது.

இவரது வீட்டிற்கு முன்பு தண்ணீர் தேக்கி வைப்பதற்காக தண்ணீர் டேங்க் கட்டப்பட்டுள்ளது. இதில் இருந்த மின் மோட்டார் பழுதடைந்ததால் மின் மோட்டாரை பழுதுபார்க்க கொடுத்து இருந்தனர். இந்த நிலையில் இவரது மனைவி திவ்யா வீட்டில் உள்ள துணிகளை துவைப்பதற்காக தண்ணீர் டேங்க் மூடியை அகற்றிவிட்டு தண்ணீரை எடுத்து துணி துவைத்து கொண்டு இருந்தார்.

அப்போது குழந்தை ஹரிஷ் விளையாடி கொண்டு இருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தான். இதை கவனிக்காத திவ்யா துணி துவைத்துவிட்டு வந்து பார்த்த போது குழந்தையை காணவில்லை.

அக்கம் பக்கம் தேடி பார்த்து விட்டு பின்பு தொட்டியில் பார்த்த போது குழந்தை தொட்டியில் கிடப்பதை பார்த்து கதறினார். உடனே அக்கம் பக்கத்தினர் குழந்தையை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். இது குறித்து ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஓமலூர் பகுதியில் நடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News