உள்ளூர் செய்திகள்

நாட்டறம்பள்ளி அருகே கல்லூரி மாணவி கொலை

Published On 2023-10-15 17:04 GMT   |   Update On 2023-10-15 17:04 GMT
  • சரண்ராஜ் வீட்டின் அறைக்கு ஜீவிதாவை இழுத்து சென்று அவரை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.
  • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகள் ஜீவிதா (வயது 18). இவர் பர்கூர் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்தார்.

இவரது தாய் மாமன் கந்திலி கசிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த புகைப்படம் எடுக்கும் வேலை செய்து வந்த சரண்ராஜ் (34) என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இதில் ஜீவிதா சரண்ராஜிடம் கடந்த சில மாதங்களாக பேசவில்லை என கூறப்படுகிறது.

நேற்று மதியம் வீட்டில் இருந்த ஜீவிதாவை, சரண்ராஜ் பணந்தோப்பு பகுதியில் உள்ள அவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது ஜீவிதாவுக்கும், சரண்ராஜிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரமடைந்த சரண்ராஜ் வீட்டின் அறைக்கு ஜீவிதாவை இழுத்து சென்று அவரை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். மேலும் யாருக்கும் தெரியாமல் வீட்டை பூட்டி விட்டு சரண்ராஜ் சாவியை வீட்டருகே குளியலறையில் வீசிவிட்டு அங்கிருந்து தலைமறைவானார். வெகுநேரமாகியும் வீட்டிலிருந்து சென்ற மகள் வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் ஜீவிதாவை பல இடங்களில் சென்று தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில் உறவினர்கள் சரண்ராஜிக்கு சொந்தமான வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அறையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் ஜீவிதா பிணமாக கிடந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து, அளித்த தகவலின் பேரில், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், நாட்டறம்பள்ளி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது ஜீவிதா உடலுக்கு சரண்ராஜ் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து சரண்ராஜை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சரண்ராஜ் வெலக்கல்நத்தம் பகுதியில் உள்ள டீ கடை முன்பு இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படை போலீசார் வெளக்கல் நத்தம் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

போலீசார் வருவதை கண்டதும் சரண்ராஜ் தன் கையில் வைத்திருந்த விஷத்தை குடித்தார்.

போலீசார் அவரை கைது செய்து, சிகிச்சைக்காக நாட்டம்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சரண்ராஜ் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அதனை ஆய்வு செய்தனர்.

சரண்ராஜ் தனது செல்போனில், ஜீவிதாவும், நானும் 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். அவரை திருமணம் செய்து கொள்ளலாம் வா என கூறினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார்.

எங்களால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இதனால் நான் ஜீவிதாவை கொலை செய்துவிட்டு, நானும் தற்கொலை செய்து கொள்ள விஷம் குடித்தேன். மனதளவில் நாங்கள் ஏற்கனவே கணவன்-மனைவியாக மாறிவிட்டோம். சாவும் நேரத்தில் கூட நாங்கள் ஒன்றாக இருக்க வேண்டும்.

நான் இறந்த பிறகு எங்களது உடல்களை ஒரே இடத்தில் புதைக்க வேண்டும் என பேசி வீடியோவும் பதிவு செய்திருந்தார்.

இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News