உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிள் மோதியதில் சாலையில் விழுந்த சிறுமி, குழந்தை.

சாலையை கடக்க முயன்ற சிறுமி-குழந்தை மீது மோட்டார் சைக்கிள் மோதல்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்

Published On 2022-07-09 04:27 GMT   |   Update On 2022-07-09 04:27 GMT
  • ஆவுடையானூர் பேருந்து நிலையத்தை அருகில் உள்ள கிராமப்புறங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகளவில் பயன்படுத்திவருகின்றனர்.
  • இந்த சாலையில் மாலை வேளைகளில் பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வாகனங்கள் அதிகளவில் செல்வதால் போக்குவரத்து நெருக்கடியும் தொடர்ந்து ஏற்படுகிறது.

தென்காசி:

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் முப்புடாதி அம்மன் கோவில் அருகே நேற்று மாலையில் 10 வயது சிறுமி ஒருவர் தனது 1 வயது தம்பியை இடுப்பில் வைத்துக்கொண்டு சாலையை கடக்க முயன்றார்.

அப்பொழுது பொட்டல்புதூரில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது பயங்கரமாக மோதி கீழே தள்ளியது.

இதில் தூக்கி வீசப்பட்ட இருவரில் சிறுமி சம்பவ இடத்தில் பேச்சு மூச்சு இன்றி மயங்கினார். 1 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக தலையில் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினான். உடனடியாக அக்கம்பக்கத்தில் நின்றவர்கள் சிறுவனையும் மோட்டார் சைக்கிள் மோதியதில் மயங்கி கிடந்த சிறுமியையும் மீட்டு தண்ணீர் கொடுத்து ஆசுவாசப்படுத்தினர்.

இருவருக்கும் சிறிய காயங்கள் மட்டும் ஏற்பட்டிருந்தது. மோட்டார் சைக்கிளில் சென்று மோதிய நபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார். இருப்பினும் வேண்டாம் என கூறி சிறுமி தனது தம்பியை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

காயமடைந்த இருவருக்கும் மருத்துவ உதவி தேவைப்பட்டால் தான் பணம் தருவதாக கூறி மோட்டார் சைக்கிள் வந்து மோதிய நபர் தனது முகவரியையும் கொடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.

அப்பகுதி மக்கள், மற்றும் தமிழன் மக்கள் நலச் சங்கத்தினர் கூறியதாவது:-

ஆவுடையானூர் பேருந்து நிலையத்தை அருகில் உள்ள கிராமப்புறங்களை சேர்ந்த பள்ளி மாணவர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் அதிகளவில் பயன்படுத்திவருகின்றனர்.

இந்த சாலையில் மாலை வேளைகளில் பாவூர்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு வாகனங்கள் அதிகளவில் செல்வதால் போக்குவரத்து நெருக்கடியும் தொடர்ந்து ஏற்படுகிறது.

தொடர் விபத்துகள் நடந்து வரும் ஆவுடையானூர் பேருந்து நிலையம் மூன்று முக்கு சாலையில் உள்ள தென்வடல், கிழமேல் சாலையில் வேகத்தடைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அமைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

Tags:    

Similar News