உள்ளூர் செய்திகள்

செய்யாறில் சென்னை போலீஸ்காரரின் தாய், தந்தை விஷம் குடித்து தற்கொலை

Published On 2022-06-19 06:45 GMT   |   Update On 2022-06-19 06:45 GMT
  • வரதராஜுலு, தனலட்சுமி இருவரும் சிகிச்சைக்காக செய்யாறு கீழ் புதுப்பாக்கம் விரிவு பகுதியில் வசிக்கும் தனது இளைய மகள் ஷர்மிளா வீட்டிற்கு வந்து தங்கியிருந்தனர்.
  • அறுவை சிகிச்சை செய்து ஏதாவது ஏற்பட்டால் எப்படி தனியாக வாழ்வது என கண்கலங்கி மகளிடமும் மருமகனிடம் கூறியுள்ளனர்.

செய்யாறு:

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அடுத்த சட்டுவந்தங்கள் கிராமத்தை சேர்ந்தவர். வரதராஜுலு (வயது 82), இவரது மனைவி தனலட்சுமி (71), இவர்களுக்கு சசிகலா, ஷர்மிளா என்ற 2 மகளும் வெங்கடேசன் என்ற ஒரு மகனும் உள்ளனர்.

வெங்கடேசன் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். தனலட்சுமிக்கு கடந்த 10-ந்தேதி கீழே விழுந்து இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதனால் வரதராஜுலு, தனலட்சுமி இருவரும் சிகிச்சைக்காக செய்யாறு கீழ் புதுப்பாக்கம் விரிவு பகுதியில் வசிக்கும் தனது இளைய மகள் ஷர்மிளா வீட்டிற்கு வந்து தங்கியிருந்தனர்.

அறுவை சிகிச்சை செய்து ஏதாவது ஏற்பட்டால் எப்படி தனியாக வாழ்வது என கண்கலங்கி மகளிடமும் மருமகனிடம் கூறியுள்ளனர். நேற்று இரவு 10 மணிக்கு படுக்க சென்றனர்.

இரவு சுமார் ஒரு மணி அளவில் ஷர்மிளா சென்று அம்மா, அப்பாவை பார்த்தபோது வரதராஜுலு, தனலட்சுமி விஷமருந்தி மயங்கி கிடந்தனர்.

உடனடியாக இருவரையும் ஆட்டோவில் செய்யாறு அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து 2 பேரும் இறந்து விட்டதாக கூறினார்.

இது சம்பந்தமாக ஷர்மிளாவின் கணவர் ரவி செய்யாறு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலு வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News