மீஞ்சூர் அருகே கொசுவை விரட்ட வைத்த தீயில் உடல் கருகி மூதாட்டி பலி
- சிகிச்சை பலனின்றி மூதாட்டி மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த மெரட்டூர் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள் (வயது 70). இவர் தனியாக குடிசை வீட்டில் வசித்து வந்தார். இவர் இரவு நேரத்தில் கொசுக்கடியில் இருந்து தப்பிக்க கட்டில் அருகே குப்பையை குவித்து எரிப்பது வழக்கம்
இந்த நிலையில் வழக்கம்போல் அவர் கட்டிலின் அடியில் கொசுவை விரட்ட புகைக்காக தீவைத்தார். பின்னர் மாரியம்மாள் தூங்கி விட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மாரியம்மாளின் உடலில் தீப்பற்றியது. சிறிது நேரத்தில் தீ மளமளவென உடல் முழுவதும் பரவி பற்றி எரிந்தது. இதில் உடல் கருகிய மாரியம்மாள் அலறி துடித்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பொன்னேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மூதாட்டி மாரியம்மாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.