உள்ளூர் செய்திகள்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டி?- அமைச்சர் முத்துசாமி பேட்டி

Published On 2023-01-18 10:51 IST   |   Update On 2023-01-18 11:30:00 IST
  • இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க., காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தீவிரம் காட்டிவருகிறார்கள்.
  • இடைத்தேர்தல் என்பதால் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்று தீவிரமாக உள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா கடந்த 4-ந் தேதி திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து இந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த முறை தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் காங்கிரசுக்கே ஒதுக்கப்படுமா? அல்லது தி.மு.க.வே போட்டியிடுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட தி.மு.க., காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் தீவிரம் காட்டிவருகிறார்கள். இடைத்தேர்தல் என்பதால் எப்படியும் வெற்றி பெற்று விடலாம் என்று தீவிரமாக உள்ளனர்.

இந்த நிலையில் அமைச்சர் முத்துசாமி இன்று ஈரோட்டில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்தார். அப்போது அவரிடம் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. போட்டியிடுமா? என்று நிருபர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறியதாவது:-

தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளது. மக்களுக்கான திட்டங்கள் நல்ல முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் தி.மு.க.சார்பிலோ அல்லது காங்கிரஸ் சார்பிலோ வேட்பாளர்களாக யார் நின்றாலும் அவர்கள் வெற்றிக்காக தி.மு.க.வினர் பாடுபடுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News