உள்ளூர் செய்திகள்

மேல்மருவத்தூர் அருகே கஞ்சா விற்பனை தகராறில் தொழிலாளி வெட்டிக்கொலை

Published On 2022-07-18 12:21 IST   |   Update On 2022-07-18 12:21:00 IST
  • மதுராந்தகம் அருகே உள்ள மேலவலம் பேட்டையை சேர்ந்தவர் அய்யனார்.
  • தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மதுராந்தகம்:

மதுராந்தகம் அருகே உள்ள மேலவலம் பேட்டையை சேர்ந்தவர் அய்யனார் (வயது48). தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பரான வீரமுத்து(39) என்பவருடன் மேல்மருவத்தூர் அருகே கீழாமூர் ஆற்றுப்படுகைக்கு சென்றார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த 6 பேர் கும்பல் அவர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் அய்யனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். வீரமுத்து பலத்த வெட்டுக்காயத்துடன் தப்பினார்.

உடனே கொலை கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.தகவல் அறிந்ததும் மேல்மருவத்தூர் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

கொலையுண்ட அய்யனாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த வீரமுத்து செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

விசாரணையில் உத்திரமேரூர் அருகே உள்ள திருபுலிவனம் கிராமத்தைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி ஒருவர் தனது கூட்டாளிகளுடன் அய்யனாரை தீர்த்து கட்டியது தெரிய வந்தது. கருங்குழி பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து மேலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. கஞ்சா வியாபாரியை பிடிக்க போலீசார் விரைந்து உள்ளனர்.

கஞ்சா விற்பனை தகராறில் தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News