உள்ளூர் செய்திகள்

மாங்காடு அருகே போலீசாரின் பிடியில் இருந்து தப்பிய மோட்டார் சைக்கிள் திருடன் கைது

Published On 2023-03-03 05:30 IST   |   Update On 2023-03-03 05:31:00 IST
  • கெருகம்பாக்கம் பகுதியில் மறைத்து வைத்திருக்கும் மோட்டார் சைக்கிளை அவர் காண்பித்து கொண்டிருந்த போது திடீரென போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச்சென்றார்.
  • கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் தப்பி சென்றதால் போலீசார் அவரை தேடி வந்தனர்.

மாங்காடு:

மாங்காடு போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் ஒருவர் தனது குடும்பத்துடன் முகலிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த மாதம் அவரது வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இது குறித்து அவர் மாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தண்டலம், மணிமேடு, பெரியார் தெருவை சேர்ந்த விஷ்ணு (21), என்பவர் சப்- இன்ஸ்பெக்டரின் மோட்டார் சைக்கிளை திருடி செல்வது பதிவாகி இருந்தது.

கடந்த மாதம் விஷ்ணுவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்வதற்காக அவர் பதுக்கி வைத்திருந்ததாக கூறப்படும் இடத்திற்கு அழைத்து சென்றனர். கெருகம்பாக்கம் பகுதியில் மறைத்து வைத்திருக்கும் மோட்டார் சைக்கிளை அவர் காண்பித்து கொண்டிருந்த போது திடீரென போலீசாரின் பிடியில் இருந்து தப்பிச்சென்றார். இதனை சற்றும் எதிர்பார்க்காத போலீசார் அவனை விரட்டி பிடிக்க முயன்றனர்.

கண்ணிமைக்கும் நேரத்தில் அவர் தப்பி சென்றதால் போலீசார் அவரை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவர் திருவண்ணாமலையில் பதுங்கியிருப்பதாக மாங்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் அங்கு பதுங்கியிருந்த விஷ்ணுவை மடக்கி பிடித்து கைது செய்தனர்

Tags:    

Similar News