உள்ளூர் செய்திகள்

விளைநிலத்தில் சட்டவிரோதமாக அமைத்த மின்வேலியில் சிக்கி மேஸ்திரி பலி

Published On 2023-05-11 09:57 GMT   |   Update On 2023-05-11 09:57 GMT
  • சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இறந்த நவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள சூடானூர் பகுதியை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மகன் நவீன் (வயது30). இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலம் அப்பகுதியில் மலையையொட்டி உள்ளது.

அந்த நிலத்தில் தற்போது நெல் பயிரிட்டுள்ளனர். அடிக்கடி காட்டுபன்றிகள் விளைநிலத்திற்குள் புகுந்து சேதப்படுத்தி வந்தது. இதனால் நெல்பயிரை பன்றிகளிடம் இருந்து காப்பாற்ற மின்வேலி அமைத்துள்ளார்.

நேற்று இரவு வயலுக்கு சென்று காட்டுபன்றிகள் எதுவும் விளைநிலத்தை சேதப்படுத்தியுள்ளதாக என பார்த்துள்ளார்.

அப்போது அங்கு அமைத்துள்ள மின்வேலியில் எதிர்பாராதவிதமாக நவீன் சிக்கியுள்ளார். இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனால் வெகுநேரமாகியும் மகன் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த பெற்றோர்கள் விளைநிலத்திற்கு சென்று பார்த்தனர்.

அப்போது மின்வேலியில் சிக்கிய நவீன் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து மாரண்டஅள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி இறந்த நவீன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News