உள்ளூர் செய்திகள்

கொடுமுடி அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி- போலீசார் தீவிர விசாரணை

Published On 2023-09-13 12:59 IST   |   Update On 2023-09-13 12:59:00 IST
  • ஏ.டி.எம் மையத்தில் இரவு நேர காவலாளி கிடையாது.
  • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

கொடுமுடி:

ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த சாலைப்புதூர் ஈரோடு-கரூர் சாலையில் தனியார் வங்கியின் ஏ.டி.எம் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த ஏ.டி.எம் மையத்தில் இரவு நேர காவலாளி கிடையாது. இதைப்போல் அலாரமும் வைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை அந்த பகுதி சேர்ந்த மக்கள் வழக்கம் போல் பணம் எடுப்பதற்காக அந்த ஏ.டி.எம். மையத்திற்கு சென்றனர். அப்போது ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் நள்ளிரவில் அந்த ஏ.டி.எம். மையத்திற்கு வந்த மர்ம நபர்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துள்ளனர். ஏ.டி.எம். மையத்தில் உள்ள லாக்கரை உடைக்க முயன்ற போது முடியாததால் மர்ம நபர்கள் திரும்பி சென்று விட்டனர். இதனால் ஏ.டி.எம். மையத்தில் இருந்த பணம் தப்பியது.

ஏ.டி.எம். மையத்தில் இரவு நேர காவலாளி மற்றும் அலாரம் இல்லாததை நன்கு தெரிந்து கொண்ட நபர்கள் திட்டமிட்டு இந்த துணிகர கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News